சேலம், செப்.4: சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, மேச்சேரி, மேட்டூர், ஓமலூர் உள்பட பல பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் தக்காளி பல நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் தக்காளியை விவசாயிகள் சேலம் கடைவீதி, வாழப்பாடி, ஆத்தூர் உள்பட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு விற்பனைக்கு வரும் தக்காளியை, சாலையோர வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர்.
கடந்த மே, ஜூன் மாதங்களில் தக்காளி வரத்து சீராக இருந்ததால் தக்காளி விலை ₹15 முதல் ₹18 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட 70 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் தக்காளி ₹120 வரை சென்றது. இந்த நிலையில் கடந்த இரு வாரமாக அனைத்து பகுதிகளிலும் பரவலாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது. சேலம் மார்க்கெட்டில் நேற்று தரமுள்ள தக்காளி கிலோ ₹20 என்றும், இரண்டாம் தரம் ₹15 என விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.