புதுடெல்லி: டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. முதல்வர் கெஜ்ரிவால் அமல்படுத்திய புதிய கலால் கொள்கை சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு விதிகளை மீறி உருவாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பல்வேறு தனியார் மதுபான கடைகளுக்கு அரசு பணம் வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதனால், புதிய கலால் கொள்கைக்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்க மறுத்த கவர்னர், முறைக்கேடுகள் பற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்நிலையில், புதிய கலால் கொள்கை வாபஸ் பெறப்படுவதாக துணை முதல்வர் சிசோடியா நேற்று திடீரென அறிவித்துளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘புதிய கலால் கொள்கையை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் இயங்கி வரும் 468 தனியார் மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 1ம் தேதியுடன் (நாளை) மூடப்படும். இனிமேல், அரசு மதுபான கடைகள் மட்டுமே இயங்கும்,’ என்று தெரிவித்தார். …