சமயபுரம், நவ.15: மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்ஞீலீ வடக்கு தெருவை சேர்ந்த லோகநாதன்(50). தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தீபாவளி அன்று இரவு திருவெள்ளறை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு திருப்பைஞ்ஞீலீ நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி-துறையூர் நெடுஞ்சாலை கடக்க முயன்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக லோகநாதன் பைக் மீது மோதியது. இதில் டூவீலரில் வந்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லோகநாதனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த லோகநாதன் பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.