மதுரை ஆக. 2: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மிக்கேல்(72). இவர் தனது பேத்தியை கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்த்துவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார். மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டிற்கு நேற்று முன்தினம் வந்தவர், பரமக்குடி செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தார். அவருக்கு அருகே இருந்த நபர், அவரிடம் நட்பு ரீதியாக பேசிக் கொண்டிருந்தார். பின்னர் இறங்கிச் சென்ற அவர் 2 கப்புகளில் டீ வாங்கி வந்து, ஒன்றை மிக்கேல் வசம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை அவர் குடித்துள்ளார்.
இதனால் மிக்கேலும் அவர் கொடுத்த டீயை குடித்துள்ளார். அப்போதே அவர் மயங்கிவிட்டார். பின்னர் விழித்துப் பார்த்தபோது அவர் அணிந்திருந்த ஒன்றேகால் பவுன் மோதிரம் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டீயில் குறிப்பிட்ட நேரம் வரையிலும் மயக்கத்தில் ஆழ்த்தும் வகையிலான மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் பேரில், போலீசார் திருட்டு ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.