வேடசந்தூர், ஜன. 10: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்(52). இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடையில் யாரும் இல்லாததால் கடைக்குள் புகுந்த குடிபோதை இளைஞர் சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்துள்ளார். அதன் பின்னர் கடை மேஜையின் கீழே உபயோகத்துக்கு வைத்திருந்த அரிவாளை எடுத்து தனது இடுப்பில் சொருகி வைத்துவிட்டு கடையில் வெளியே கெத்தாக நின்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அந்த குடிபோதை இளைஞரை பிடித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குடிபோதை இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவரது பெயர் ராஜூ (30)என்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். அந்த இளைஞர் அளவுக்கதிகமான மது போதையில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் போலீசார் அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, மறுநாள் வேடசந்தூர் காவல் நிலையம் வருமாறு கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். மேலும் அந்த குடிபோதை இளைஞர் கடைக்குள் சென்று திருடும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.