அண்ணாநகர்: டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்கு ரூ.2 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் உள்ள டி.பி.சத்திரம் காவல் நிலையம் சுமார் 42 ஆண்டு பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது இக்கட்டிடம் முழுமையாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இந்த கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு, அங்குள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் தற்காலிகமாக டி.பி.சத்திரம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, டி.பி.சத்திரம் பகுதியில் ஏற்கெனவே காவல் நிலையம் இருந்த இடத்தில் 3 தளங்களுடன் புதிய காவல் நிலைய கட்டுமான பணிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், டி.பி.சத்திரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதம் ஆகியோர் கட்டிட பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தனர். இங்கு ஓராண்டுக்குள் காவல் நிலைய கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாடி கட்டிடத்தில், உதவி ஆணையர் அலுவலகம், சட்டம் – ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையம் இயங்கும் என காவலர்கள் தெரிவித்தனர்….