சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி குறித்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவு செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். மாமல்லபுரத்தில் இன்று 44 உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இந்நிலையில், மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் வருகையால் விமான நிலையம், அடையார் ஐஎன்எஸ் கடற்கரை தளம், நேரு உள் விளையாட்டு அரங்கம் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் தங்கும் ஆளுநர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமாளிப்பு விழா என அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவிற்கு வருகை தரும் பிரதமர் மோடி குறித்து யாரேனும் வாட்ஸ் அப், டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவு செய்வோர் அல்லது அவதூறு கருத்துக்களை பகிரும் நபர்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அப்படி ஏதேனும் கருத்துக்கள் பகிர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்….