மதுரை: டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடையே,பிற அரசு அலுவலர்களுடன் ஒப்பிடும்போது அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வேலை, நாள் மற்றும் நேரம் குறைவானது. இவ்வாறு இருக்க, டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி வருகிறது என்றும், இது பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது என்றும் உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தனது இடமாறுதல் கோரிக்கை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் இத்தகைய உத்தரவுகளையும் கருத்தையும் பிறப்பித்திருந்தார். அதுமட்டுமன்றி, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், அவர்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்கவும், அரசு சந்தேகத்திற்கு இடமின்றி போதுமான தொகையை ஒதுக்குகிறது. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு தரமான கல்வியை ஆசிரியர்கள் வழங்குகிறார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்பது போன்ற கருத்துக்களையும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலர், மாவட்டம் தோறும் சிறப்புக்குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்; இந்த குழு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியாக தொழில் செய்வது, பகுதி நேர வேலைகளை செய்வது, டியூசன் சென்டர் நடத்துவது, வீடுகளில் டியூசன் எடுப்பது போன்றவை தொடர்பான தகவல்கள், புகார்கள், ஆவணங்களை சேகரித்து தொடர்புடைய ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவினையும் பிறப்பித்திருக்கிறார். …