டிஜிட்டல் நன்மையை நோக்கி குழந்தைகளை வழிநடத்த வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்பது தெரிந்தால் நாம் அவர்களுக்கு எப்படி கற்பிக்கலாம் என்று திட்டமிடலாம். குழந்தைகள் ஐம்புலன்கள் மூலமாக பார்த்து, கேட்டு, செயலில், சூழ்நிலையோடு தொடர்புப்படுத்தி, ஆராய்ந்து மற்றும் குழுவாக என பலவற்றின் மூலமாக தங்களின் கற்றல் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒரு குழந்தைக்கு பள்ளியில் ஆசிரியர் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டி மூலமாகவும் அவர்களின் கற்றல் முழுமை அடைகிறது. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்பது தெரிந்தால் தான் நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது புரியும். அவர்களின் தேவை என்ன? விருப்பம் என்ன? எதை? எப்படி? எங்கு? எவ்வாறு கற்பிப்பது? என்று தெரிந்தாலே கற்பித்தல் எளிமையாகவும் சிறப்பாகவும் அமையும். இவை எல்லாவற்றையும் விட ஒரு குழந்தைக்கு தேவையான எதிர்பார்ப்பு மற்றும் விருப்பம் நிறைவேறும் போது அவர்களின் கற்றல் ஆர்வமும் ஈடுபாடும் தானாக ஏற்படும். இவ்வாறாக தன் குழந்தைக்கு எது வரும்? எது வரவில்லை? அதை எப்படி சரி செய்வது? என ஆராய்ந்து கற்றுக் கொடுத்து வருகின்றனர் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீ ராம்-தீபா தம்பதியினர்.இவர்களது நான்கு வயது மகள் தக்ஷிண்யா 4 நிமிடம் 40 நொடிகளில் 196 நாடுகளின் பெயர்களையும் அதன் கரன்ஸி பெயர்களையும் சொல்லி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். தக்ஷிண்யாவின் திறமையை அங்கீகாரம் செய்து ‘கலாம்’ஸ் உலக சாதனை குழுமம்’ ‘கலாம் விருது’ கொடுத்து கௌரவித்துள்ளது. இது எவ்வாறு சாத்தியமானது என்பதை பகிர்கிறார் தக்ஷிண்யாவின் தாய் தீபா.“சிறு வயதிலிருந்தே அதாவது தக்ஷிண்யாவிற்கு விவரம் தெரிந்து ஒரு வயதிலிருந்தே ஞாபக சக்தி அதிகம். ஒரு முறை சொன்னால் போதும் அடுத்த நிமிடமே  அவள் அதை அப்படியே ஒப்பிப்பாள். மறக்கவும் மாட்டா. எப்ப கேட்டாலும் தெளிவா சொல்வாள். விளையாடிக் கொண்டு தானே இருக்கா… எங்க கவனிக்க போறான்னு நினைத்து நாம வேறு ஏதாவது விஷயங்களைப் பற்றி பேசுவோம். ஆனால் அதற்கு சரியா பதில் சொல்வாள். இது குழந்தைகளுக்கே உரிய இயல்பு. இதை நல்வழியில் கொண்டு போக வேண்டும் என்று கடந்த ஜனவரியில், உலகில் உள்ள 196 நாடுகளின் கரன்சி பெயர்களை தெரிந்து கொள்வதற்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். காலை பத்து நிமிடம் சொல்லி கொடுத்தால், அதை இரவு பத்து நிமிடம் மறுபடியும் அவளிடம் கேட்பேன். இப்படியே பிராக்டீஸ் கொடுத்து வந்தேன். மற்ற நேரங்கள் எல்லாம் படி படி என தொந்தரவு கொடுக்க மாட்டேன். குழந்தைக்கு எப்போது ஆர்வம் இருக்கிறதோ அந்த நேரத்தில் மட்டும் சொல்லிக் கொடுப்பேன். இருபதே நாட்களில் கற்பூரம் மாதிரி கற்றுக் கொண்டாள். இப்போது எந்த நாட்டின் பெயரை சொன்னாலும் அந்த நாட்டின் கரன்சியின் பெயரை சொல்லிவிடுவாள்” என்கிற தீபா, மற்ற பெற்றோர்களிலிருந்து வேறுபடுகிறார்.‘‘பொதுவாக பெற்றோர்களாகிய நாம் போட்டியான உலகில் வலுக்கட்டாயமாக நமது விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கிறோம். படிப்பு… படிப்பு என்றில்லாமல் மற்ற துறையின் மீதும், அவர்களுக்கு கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது தான் முக்கியமே தவிர நமக்கு என்ன பிடித்திருக்கிறது என்பது அவசியமில்லை. இதில் தெளிவாக இருந்தாலே ஒவ்வொரு குழந்தையும் சிறந்தவர்களாகவே வளர்வார்கள். ஐந்து நிமிடம் பாடம்  சொல்லிக் கொடுக்கிறோம். அடுத்து ஐந்து நிமிடம் ஓவியம் வரைவது, பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என அந்த குழந்தைக்கு எது பிடித்திருக்கிறதோ அதற்கு அனுமதிப்போம். அடுத்த ஐந்து நிமிடமும் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த வேண்டாமே…!‘கண் வலிக்கும் பார்க்கக் கூடாது’ என்று சொல்லி வைத்து குழந்தைக்கு செல்போன் கொடுக்காமல் பழக்குவோம். அதையும் தாண்டி ‘நீங்க பார்க்கிறீங்க உங்களுக்கு கண் வலிக்காதா…’ என்று கேட்கும் அளவிற்கு நாமும் வைத்துக் கொள்ளாமல் இருப்போம். இன்றைய டிஜிட்டல் இணைய உலகில் நல்ல விஷயத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைத்திருக்கிறது. அதை நோக்கி மட்டுமே குழந்தைகளை வழி நடத்தி செல்வோம்” என்கிற கோரிக்கையினை முன் வைக்கிறார், தக்ஷிண்யா அம்மா தீபா.  தொகுப்பு: அன்னம் அரசுபடங்கள்: ஜி.சிவக்குமார்

Related posts

மனவெளிப் பயணம்

உங்கள் பாப்பா பள்ளிச் செல்ல மறுக்கிறதா?

குழந்தைகள் உடற்பருமனை தடுக்கும் வழிகள்!