டிஏபிக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்தலாம்: வேளாண் துறை அறிவுறுத்தல்

 

சிவகங்கை, நவ.17: டி.ஏ.பி.க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி, விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், பெரும்பாலும் டி.ஏ.பி. உரத்தையே அடி உரமாக பயன்படுத்துகின்றனர்.

டி.ஏ.பி. உரம் தயாரிப்பிற்க்கு தேவைப்படும் மூலப் பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை உலக அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.உள்நாட்டில் டி.ஏ.பி உர உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால், டி.ஏ.பி. உரங்கள் வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டி.ஏ.பி. உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே நமது நாட்டிலேயே உற்பத்தி செய்து எளிமையாக கிடைக்கும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம்.

ஒரு மூட்டை டி.ஏ.பி. உரத்தில் 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ளது. இதற்கு மாற்றாக மூன்று மூட்டை சூப்பர் பாஸ்பேட்டும் 20 கிலோ யூரியாவும் சேர்த்து அடியுரமாக இடலாம். அல்லது காம்ப்ளக்ஸ் ஒரு மூட்டையும் 75கிலோ சூப்பர் பாஸ்பேட் சேர்த்து அடியுரமாக பயன்படுத்தலாம். பாஸ்பேட்டில் உள்ள மணிச்சத்து, நீரில் எளிதில் கரையும் தன்மை கொண்டதால் வேர் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்திரமேரூர் அருகே வாசீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த 3 பேர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே குறுகலாக கட்டப்பட்ட பாலத்தால் மக்கள் அவதி