சென்னை: குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 23ம் தேதி வெளியிட்டது. அன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தல் தொடங்கியது. இதில் இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இறுதிநாளான நேற்று முன்தினம் மாலை 5.15 மணி வரை 10 லட்சத்து 94 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பித்தனர். இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் நேற்று முன்தினம் இரவில் அதிகமான தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை புதிய சாதனையை படைத்துள்ளது.இது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 23ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பிக்க 1 மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது, நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. மொத்தம் 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளனர். 11,786 பேரின் விண்ணப்பங்கள் பெண்டிங்கில் வைக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வுகளில் அதிகப்பட்சமாக சுமார் 25 லட்சம் வரை விண்ணப்பித்துள்ளனர். இது தான் இது வரை சாதனையாக இருந்து வருகிறது. ஆனால், குரூப் 2 தேர்வுகளில் சுமார் 6.50 லட்சம் பேர் வரை தான் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை குரூப்2 தேர்வுகளுக்கு 11 லட்சத்து 61 ஆயிரத்து 227 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் புதிய சாதனையாகும். இவ்வளவு பேர் விண்ணப்பித்தலுக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் மீது உள்ள நம்பிக்கையே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்….