டாஸ்மாக் கடைக்கு வழிகாட்டாததால் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தப்பியோடியவர்களுக்கு போலீஸ் வலை

 

வேடசந்தூர், மார்ச் 4: வேடசந்தூர் அருகே டாஸ்மாக் கடைக்கு வழிகாட்டாத ஆத்திரத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள பூலாங்குளத்தை சேர்ந்தவர் செல்வமணி(20). டிரைவர் வேலை செய்து வருகிறார். இவர் டூவீலரில் சாலையூர் நால்ரோடு வந்துவிட்டு மீண்டும் பூலாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது பூலாங்குளம் பிரிவில் டூவீலரை நிறுத்தி விட்டு நின்று இருந்த இரண்டு இளைஞர்கள் செல்வமணியை நிறுத்தி டாஸ்மாக் கடை எங்கு உள்ளது என்று கேட்டுள்ளனர். அதற்கு செல்வமணி இந்த பக்கமாக சென்றால் ஒன்றரை கிலோ மீட்டரில் டாஸ்மார்க் கடை உள்ளது என்று கூறியுள்ளார். அதனை ஏற்காத இளைஞர்கள் இருவரும் நீயும் எங்கள் கூடவே வந்து டாஸ்மாக் கடையை காட்டு என்று கூறியுள்ளனர். இளைஞரோ ஒரு ஐந்து நிமிடம் காத்திருங்கள் நான் எனது வீடு வரைக்கும் சென்று விட்டு வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்ட மர்ம நபர்கள் ஆத்திரம் அடைந்து தாங்கள் வைத்திருந்த அரிவாளை எடுத்து செல்வமணியை வெட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தங்களது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். இதில் முழங்கையில் வெட்டு காயம் அடைந்த செல்வமணியை அவரது உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் செல்வமணியிடம் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு