சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜெய்ப்பூர்-கோவை எக்ஸ்பிரசில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த 616 சவரன் நகை மற்றும் ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 800 ெராக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஜெய்ப்பூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 8ல் ஜெய்ப்பூர்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கி சென்ற நிலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயிலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பி-1 பெட்டியில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் இருப்பதை கண்டனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, உரிய ஆவணமின்றி ரூ.2 கோடியே 25 லட்சத்து 89 ஆயிரத்து 781 மதிப்புள்ள 616 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 800 கொண்டு வந்தது தெரியவந்தது. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரன் (48), தேனியை சேர்ந்த ராமநாதன் (25) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு ஜி.எஸ்.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது….