ஜெயங்கொண்டம்,பிப்.7: ஜெயங்கொண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விற்பனைக்கு தடை விதித்து கடைக்கு பூட்டு போட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜெயங்கொண்டத்தில் உணவு பாதுகாப்பு துறை சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை நகராட்சி அலுவலர் இணைந்து அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கடைவீதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி, தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர் ராமசாமி, ஜெயங்கொண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், நகராட்சி ஆணையர் அசோக் குமார் மற்றும் சுகாதார துறையினர் உள்ளிட்ட குழுவினர் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனைகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட 17 புகையிலை மூட்டைகளும் பிளாஸ்டிக் கேரி பேக் மூன்று மூட்டைகளும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பேப்பர் கப் ஒரு மூட்டையும், என ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு விற்பனைக்கு தடை விதித்து கடையை பூட்டி சாவி எடுத்துச் சென்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆய்வின் போது ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார், களப்பணி உதவியாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ராஜ், செல்வகாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.