தேனி : பெரியகுளம் தாலுகாவில் உள்ள ஜி.கல்லுப்பட்டி ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. ஊராட்சி தலைவராக மகேஸ்வரி, துணைத்தலைவராக ஆண்டிச்சாமி, செயலாளராக மீனா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், ஊராட்சி கவுன்சிலர்கள் நாகஜோதி, வீரலட்சுமி, செல்லப்பாண்டி, மதுமிதா, சுலைமான், சேகர் ஆகிய 6 பேர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு மக்கள் குறை தீர் கூட்டத்தில் இருந்த கலெக்டர் முரளீதரனை சந்தித்து ஊராட்சி தலைவர், செயலாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் ஒருதலைப்பட்சமாக நடப்பதாக கூறி, ராஜினாமா செய்யப்போவதாக மனு அளித்தனர். இதைக் கேட்ட கலெக்டர் முரளிதரன் அவசரப்பட வேண்டாம். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன் என சமாதானம் செய்து அனுப்பினார். இது குறித்து வார்டு கவுன்சிலர்கள் நாகஜோதி, வீரலட்சுமி, செல்லப்பாண்டி, மதுமிதா, சுலைமான், சேகர் ஆகியோர் கூறியதாவது: ஊராட்சி தலைவரும், செயலாளரும், ஊராட்சி பணிகள் குறித்து எந்தத் தகவலையும் தெரிவிப்பதில்லை. 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது போடவேண்டிய ஊராட்சி வார்டு உறுப்பினர்களுடனான கூட்டத்தை நடத்துவதில்லை. கூட்டம் நடத்தாமலேயே நடக்காத பணிகளுக்கு செலவு கணக்கு எழுதி ஊராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு ஊராட்சி செயலாளரும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். செய்யாத பணிகளுக்கு செலவு எழுதியதில் ரூ.பல லட்சம் மோசடி நடந்துள்ளது. உறுப்பினர்கள் கூட்டம் நடத்தாமலும், வார்டுகளில நடக்காத பணிகளுக்கு செலவு கணக்கு எழுதியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆறு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….