சென்னை: நம் நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இந்திய அரசும், மறைமுக வரி மற்றும் சுங்க வாரியமும் இணைந்து பெண் தொழில்முனைவோர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை தெற்கு சேவை மற்றும் சரக்குவரி ஆணையர் சுதா கோகா தலைமையில் அந்த ஆணையரகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பெண் தொழிலதிபர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சி, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அரங்கத்தில் நேற்று நடந்தது. 1943ம் ஆண்டு இதே மாதம் இதே நாளில் நமது ராணுவத்தில் பெண்களுக்கான படைப்பிரிவில் ஜான்சி ராணி பட்டாளம் ஏற்படுத்தப்பட்டது. அதை கொண்டாடும் விதமாக இந்திய அரசு அக்டோபர் 12ம் நாளை பெண்களை கவுரவப்படுத்தும் நாளாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சேவை மற்றும் சரக்குவரி தலைமை ஆணையர் சவுத்ரி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வருமானவரித்துறை முதன்மை ஆணையர் ஜஹான் சேப் அக்தர் மற்றும் சென்னை வடக்கு சேவை மற்றும் சரக்கு வரி ஆணையர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 14 பெண் தொழிமுனைவோர்கள் விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் சேவை மற்றும் சரக்கு வரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்….