ஈரோடு, பிப். 14: ஈரோட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஜவகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பெண் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், அதனால், பெற்றோர் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்து கொள்ளும்படி பெண் ஒருவர் பேசும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வந்தது. இந்த ஆடியோ பதிவு ஈரோடு மக்களிடம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஆடியோ பதிவு தகவல் போலியானது என மாவட்ட காவல் துறையினர் உறுதி செய்தனர்.
இதுகுறித்து ஈரோடு எஸ்பி ஜவகர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ போலியானது. மேலும், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படும். போலியான ஆடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எஸ்பி ஜவகர் கூறினார்.