கம்பம் : கம்பத்தில் ஜல்லி பரப்பி 3 மாதங்களுக்கு மேலாகியும், சாலைப்பணியை தொடங்காததால், வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர். விரைந்து சாலைப் பணியை முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திண்டுக்கல்-குமுளி சாலையை நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி முதல் லோயர்கேம்ப் வரை பைபாஸ் சாலை பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கம்பம் பகுதியில் கம்பமெட்டு ரோடு பகுதியில் பைபாஸ் சாலை வேலை நடந்து வருகிறது. இதில், காட்டுப்பள்ளி வாசல் ரோடு, ஏகலூத்து ரோடு ஆகிய ரோடுகளை பைபாஸ் சாலையுடன் இணைக்க, கம்பம் 9வது வார்டு காட்டுப்பள்ளிவாசல் ரோட்டு பகுதியில் ஒரு கி.மீ தூரத்துக்கு சாலைப்பணிக்காக, கிராமப்புற சாலைத்துறை சார்பில் 3 மாதங்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் குவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை சாலைப்பணி தொடங்கப்படவில்லை. இதனால், போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பைபாஸ் இணைப்பு சாலை பணிக்காக கடந்த மூன்று மாதத்திற்கு முன் ஜல்லிகற்களை பரப்பினர். இதனால், இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்ல முடியவில்லை. சிலர் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த சாலைப்பணி இன்னும் ஓரிரு நாளில் தொடங்கி உடனே முடிக்கப்படும். சாலைபணி முடிந்து மாநில நெடுஞ்சாலைகள் துறை வசம் ஒப்படைக்கப்படும்’ என்றார்….