மேட்டுப்பாளையம், செப்.25: ஊட்டியை சேர்ந்தவர் தர்மகுமார் (55). விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் பிரித்திவிராஜ் (27). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரித்திவிராஜ் பணியில் இருந்து விலகி கடந்த ஒரு மாதமாக ஜடையம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் இல்லத்தில் தங்கி வேலை தேடி வந்துள்ளார். மேலும், நேற்று முன்தினம் இரவு அன்னூரில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் நேற்று அதிகாலையில் மேட்டுப்பாளையம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
ஜடையம்பாளையம் புது மார்க்கெட் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து உள்ளார். இதில் இளைஞர் பிரித்திவிராஜ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை தேடி வந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.