புழல், செப். 6: சோழவரம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் அரசு திட்ட பணிகளை திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்தார். சோழவரம் ஊராட்சி ஒன்றியம், திருநிலை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம் மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பூதூர் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டிடம், வெள்ளி வாயில் ஊராட்சியில் சாலை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை திருவள்ளூர் மாவட்ட திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அனைத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமேஸ்வரி, திருநிலை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவகுமார், ஊராட்சி செயலர் கே.காமேஷ், ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.