சோழவரம் அருகே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்: உறவினர்கள் முற்றுகை போராட்டம்

 

புழல்: சோழவரம் அருகே, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ்(29). இவர் அலமாதி உப்பரபாளையத்தில் உள்ள கால்நடை விந்து சேமிப்பு மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கால்நடை பராமரிப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 16ம் தேதி பணியில் இருந்த போது மாடு முட்டியதில் காயமடைந்த யுவராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று எருமைவெட்டிப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில், மாடு முட்டியதால் காயமடைந்திருந்த யுவராஜ் உயிரிழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி உறவினர்கள் கால்நடை விந்து சேமிப்பு மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சோழவரம் காவல்துறையினர் இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்