Thursday, July 11, 2024
Home » சொத்து தகராறில் விபரீதம்; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மருமகள் சரமாரி அடித்து கொலை

சொத்து தகராறில் விபரீதம்; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மருமகள் சரமாரி அடித்து கொலை

by kannappan

பூந்தமல்லி: சொத்து தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மருமகள் இரும்பு ராடால் சரமாரியாக அடித்து கொலை செய்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்த மகன், தாய் உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்தவர் திராவிட பாலு. முன்னாள் திமுக ஒன்றிய செயலாளராகவும், ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்தவர். இவர், கடந்த 2013ம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவரது தம்பி சத்தியவேலு. இவருக்கும், திராவிடபாலு குடும்பத்துக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திராவிடபாலுவின் மனைவி செல்வி, மகன் முருகன், மருமகள் ரம்யா (32), பேரன் கருணாநிதி ஆகிய 4 பேரும் கன்னிகைப்பேர் பகுதியில் தனியே வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சத்தியவேலு மகன் புவன்குமார் (எ) விஷால் (24), பெரியப்பா திராவிடபாலுவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த பெரியம்மா செல்வி, அண்ணன் முருகன், அண்ணி ரம்யா, அவரது மகன் கருணாநிதி ஆகிய 4 பேரையும் இரும்பு ராடால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் ரம்யா உள்பட 4 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறியபடி மயங்கி சரிந்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் விஷால் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், தலையில் படுகாயமடைந்த ரம்யா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, படுகாயமடைந்த ரம்யாவின் கணவர் முருகன்,  செல்வி,  கருணாநிதி ஆகிய 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தகவலறிந்த பெரியபாளையம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, ரம்யாவின் சடலத்தை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, நேற்று அதிகாலை சத்தியவேலுவின் மகன் விஷாலை கைது செய்து விசாரிக்கின்றனர். இரு குடும்பத்துக்கு இடையே சொத்து தகராறு காரணமாக கொலை நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் கன்னிகைப்பேர் பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்….

You may also like

Leave a Comment

three + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi