வேடசந்தூர், ஜூலை 30:வேடசந்தூர் அருகே உள்ள கோடாங்கிபட்டி பகுதியில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடப்பதாக நேற்று முன்தினம் மாலை வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கோடாங்கிபட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள காட்டுப்பகுதியில் அனுமதி இன்றி சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தவர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர். இருப்பினும் சிலர் அங்கிருந்து தப்பியோடினர்.
இதையடுத்து கோடாங்கிபட்டியைச் சேர்ந்த ரவிவர்மா, சுள்ளெறும்பு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், சென்னை தாம்பரத்தை சேர்ந்த பிரபாகரன், இடையகோட்டையை சேர்ந்த சிவசெல்வன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10 டூவீலர்கள், 2 கார்கள் மற்றும் சண்டைக்கு பயன்படுத்திய 4 சேவல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பிய சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.