சேலம், அக். 22: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பக்கமுள்ள தட்டக்குடி பிலாவிளைவீடு பகுதியை சேர்ந்தவர் தம்பி(51). இவரை கடந்த ஜூலை மாதம் 22ம்தேதி கஞ்சா வழக்கில் சேலம் என்ஐபிசிஐடி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று காலை கைதி தம்பிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சிறை டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பகல் 2.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி கைதி தம்பி உயிரிழந்தார். இதுகுறித்து சிறை அதிகாரிகள் அஸ்தம்பட்டி போலீல் புகார் செய்தனர். கேரளாவில் உள்ள கைதியின் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சேலம் நீதித்துறை நடுவரும் விசாரணை நடத்தி வருகிறார்.