Sunday, June 30, 2024
Home » சேலத்தில் பரபரப்பு: முதல்வர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் போராட்டம்: மனு கொடுக்க அனுமதி மறுத்ததால் சாலைமறியல்

சேலத்தில் பரபரப்பு: முதல்வர் வீட்டு முன்பு ஆசிரியர்கள் போராட்டம்: மனு கொடுக்க அனுமதி மறுத்ததால் சாலைமறியல்

by kannappan

சேலம்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டு முன்பு, பணி நியமனம் வழங்க கேட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் 700க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை 9 மணிக்கு சென்னை   புறப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதை அறிந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் இருந்து, சேலத்தில் உள்ள முதல்வரின் வீட்டு முன்பு திரண்டனர். காலை 7 மணிக்கே வீட்டின் அருகே சாலையின் இருபுறத்திலும், பணி நியமன கோரிக்கை அட்டைகள் மற்றும் முதல்வரின் படங்களை கையில் ஏந்தியபடி அவர்கள் காத்திருந்தனர். இது குறித்து முதுநிலை பட்டதாரி ஆசியர்கள் கூறுகையில், ‘‘ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த 2018-19ம் ஆண்டுக்கான 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது.  2019 நவம்பர், 2020 ஜனவரியில் சில பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்களை நியமித்து பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது காலியாக உள்ள 1,500 ஆசிரியர் பணியிடங்களில் எங்களை நியமிக்க வேண்டும்’’ என்றனர். இதேபோல், பகுதி நேர ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறோம். மாதத்திற்கு 12 நாள் மட்டும் பணி வழங்குகின்றனர். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’’ என்றனர். காலை 9.05 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்ப, தனது காரில் வெளியே வந்தார். அப்போது திரண்டிருந்த ஆசிரியர்கள் , தங்களுக்கு பணி நியமனம் வழங்க கேட்டு கோரிக்கை அட்டைகளை காட்டினர். அவர்களை பார்த்து கும்பிட்டபடியே முதல்வர் சென்றார். அப்போது சிலர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர். …

You may also like

Leave a Comment

15 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi