சேலத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்களை சீரழித்த இயக்குநர் கைது: 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் சிக்கியது

சேலம்: சேலத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்களை வலையில் வீழ்த்தி சீரழித்த இயக்குநரை, பெண் உதவியாளருடன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அலுவலகத்தில் இருந்து ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகள் ஜனனி (32), (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது.) இவர் நேற்று முன்தினம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தான் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி வந்தேன். அப்போது நண்பர் ஒருவர் கூறியதன் பேரில், சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த சினிமா கம்பெனிக்கு சென்றேன். அங்கு சேலம் மாவட்டம் இடைப்பாடி வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேல்சத்ரியன் (38), விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திராநகரை சேர்ந்த ஜெயஜோதி (23) ஆகியோர் இருந்தனர். வேல்சத்திரியன் தன்னை இயக்குநர் எனவும், ஜெயஜோதி உதவியாளர் எனவும் கூறினர். அவர்கள் இருவரும், தாங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் கேட்டனர். தன்னிடம் பணம் இல்லை எனக்கூறவும் அவர்கள் அலுவலகத்தில் வேலைக்கு வைத்துக் கொண்டனர். ஆனால், அதற்கு சம்பளம் ஏதும் தரவில்லை. சில நாட்களுக்கு முன்பு என்னை ஆபாச படத்தில் நடிக்க இயக்குநர் வேல்சத்ரியன் கூறினார். உடனே வேலையை விட்டு விட்டு வந்துவிட்டேன். அப்போது எனது செல்போனை பறித்து வைத்துக் கொண்டனர். அந்த போனை வாங்கவும், வேலை பார்த்ததற்கு சம்பளம் பெறவும் மீண்டும் சென்றேன். அங்கு என்னை வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோர் மிரட்டினர். ஆனால், சில இளம்பெண்களை வைத்து ஆபாசமாக படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  இப்புகாரின் பேரில் போலீசார், அதிரடியாக அந்த சினிமா கம்பெனிக்கு சென்றனர். அங்கிருந்த வேல்சத்ரியன், ஜெயஜோதி ஆகியோரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக பல இளம்பெண்களை ஏமாற்றி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து சீரழித்தது தெரியவந்தது.  அந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சினிமாவில் நடிக்க வந்த இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள், ஆணுறை பாக்கெட்டுகள், லேப்டாப், கேமராக்கள், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்குகளில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து இயக்குநர் வேல்சத்ரியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.  அதுபற்றி போலீசார் கூறியதாவது: இடைப்பாடியை சேர்ந்த வேல்சத்ரியன், கடந்த சில மாதங்களுக்கு முன் ‘நோ’ என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுப்பதாக அறிவித்து, அதில் நடிக்க நடிகைகள் தேர்வை நடத்தியுள்ளார். எப்படியாவது சினிமாவில் நடித்து விட வேண்டும் என்று வந்த இளம்பெண்களிடம், ஆசை வார்த்தை கூறி மயக்கியிருக்கிறார். மேலும், அந்த இளம்பெண்களின் பெற்றோரிடமும் தான் எடுக்கும் படம் தேசிய விருதுக்கான படம். அதனால், நான் சொல்வது போல் எல்லாம் நடிக்க வேண்டும் எனக்கூறி அவர்களின் அனுமதியோடு அப்பெண்களை தனது வலையில் வீழ்த்தியுள்ளார். முதலில் அந்த பெண்களை கிளாமராக நிற்க வைத்து படம் எடுப்பதும், பிறகு அவர்களை நிர்வாணப்படுத்தி வீடியோக்களையும் எடுத்துள்ளார். அப்போது நடிக்க கற்று கொடுப்பது போல், சில பெண்களை சீரழித்துள்ளார். சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சென்னை என பல்வேறு இடங்களில் இருந்து வந்து இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து இயக்குநர் வேல்சத்ரியன், உதவியாளர் ஜெயஜோதி ஆகியோர் மீது கொலைமிரட்டல் விடுத்தல், ஆபாச படம் எடுத்த கணினி குற்றம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.  பின்னர் இருவரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். *பிரமாண்ட அறைகள், கட்டில், மெத்தை.தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு வீட்டை எடுத்து சினிமா கம்பெனி நடத்தி வந்துள்ளனர். அந்த வீட்டில் உள்ள அறைகளை ஆடம்பரமாக காட்ட இயக்குநர் வேல்சத்ரியன் பிரமாண்டப்படுத்தியுள்ளார். ஒரு அறையில் கேமரா, லைட்டிங் வசதி ஏற்படுத்த பட்டுள்ளது. அங்கு தான், இளம்பெண்களை ஆபாசமாக நிற்க வைத்து போட்டோ, வீடியோக்களை எடுத்துள்ளார். மற்றொரு அறையில் கட்டில், மெத்தை போன்றவையும் இருக்கிறது. வரவேற்பறையில் சினிமா கம்பெனியின் பெயர், அலமாரியில் ஷீல்டுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.சொகுசான சோபா செட் போட்டு, அதில் அமர்ந்தபடி பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இந்த பிரமாண்டத்தை பார்த்து நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்கள் ஏமாந்துள்ளனர். …

Related posts

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்