வீரவநல்லூர், மே 29: சேரன்மகாதேவி திலகர் தெருவில் இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கொடை விழா 21ம்தேதி கால்கோள் விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து அம்பாளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை அரிகேசவநல்லூரை அடுத்த சீனியாபுரம் கலிதீர்த்த அய்யனார் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, சேரன்மகாதேவி சாட்டுபால விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து தீர்த்தகுடமானது சந்தன மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கொடை நாளான நேற்று காலை தாமிரபரணி நதியிலிருந்து புனித நீர் எடுக்கப்பட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மதியக்கொடை நடந்தது. மாலை அம்பாளுக்கு அலங்கார பூஜைகள் முடிந்து இரவு பூச்சட்டி ஊர்வலம் நடந்தது. பின்னர் சாமக்கொடை முடிந்து படையல் பூஜையுடன் விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.