ஏழாயிரம்பண்ணை, டிச. 20: வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள செவல்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் உடைந்து கிராமப்புற வயல்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் சோளப்பயிர்கள், அனைத்தும் தண்ணிரில் மூழ்கியது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள ஊராட்சி பகுதியில் உள்ள செவல்பட்டி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் 150க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பாக நெற்ப்பயிர்கள் வயல்வெளிகளில் பயிர்களை நட்டி வைத்து விளைவித்து வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செவல்பட்டியில் உள்ள கண்மாய் நிரம்பி உடைந்தது. இதன் காரணமாக மழைநீரானது வயல்வெளிகளில் புகுந்து நட்டு வைக்கப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மேலும் ஒரு சில இடங்களில் பயிர்கள் தண்ணிரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் இப்பகுதியில் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் செலவு செய்து விவசாயம் செய்து நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் முழுவதும் இரண்டு தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.