திருவனந்தபுரம்: செல்போன்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு நடிகர் திலீப் நடிகை பலாத்காரம் தொடர்பான பல முக்கிய விவரங்களை அழித்துவிட்டார் என்று, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். மலையாள நடிகை பலாத்கார வழக்கில், தற்போது தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதி கவுசர் கூறியது: விசாரணையை தேவையில்லாமல் நீட்டித்து கொண்டு செல்ல முடியாது. இந்த வழக்கில் அப்படி என்ன முக்கியத்துவம் உள்ளது என்று கேட்டார்.அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது: நடிகர் திலீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சில முக்கிய ஆவணங்களை பரிசோதிக்க வேண்டியது உள்ளது. போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப் அவரது தம்பி உள்பட 3 பேரின் 6 செல்போன்களை ஜனவரி 31ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஜனவரி 29ம் தேதி உத்தரவிடப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே திலீப் உள்பட 3 பேரின் செல்போன்களில் நடிகை பலாத்காரம் தொடர்பான சில முக்கிய விவரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. அவர்கள் தங்களது போன்களை பார்மேட் செய்து விட்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள தடயவியல் பரிசோதனைக்கூடத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் எங்களது தீவிர முயற்சியால் போன்களில் இருந்து சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து கூடுதலாக பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது. இதனால் தான் விசாரணையை முடிக்க சிறிது காலதாமதம் ஆகிறது. விசாரணையை எப்போது முடிக்க வேண்டும் என்று நீதிமன்றமே தீர்மானிக்கலாம் என்றார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் ஆஜரான வக்கீல் கூறியது: நடிகை மீது மிக மோசமான குற்றம் நடத்தப்பட்டு உள்ளது. இதன் பின்னணியில் யார்? யார்? செயல்பட்டனர் என்ற உண்மை வெளி உலகிற்கு தெரிய வேண்டும். உண்மையை கண்டு பிடிப்பதற்காகத் தான் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூற குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்த உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி நாளைக்கு (24ம் தேதி) தள்ளி வைத்தார்….
செல்போனில் இருந்த முக்கிய விவரங்களை நடிகர் திலீப் அழித்து விட்டார்: கேரள உயர்நீதிமன்றத்தில் போலீஸ் பரபரப்பு தகவல்
previous post