சென்னை: சென்னையில் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரது தொடர்பு எண்ணை முகநூலில் பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் சுய தொழில் செய்து வருகிறார். இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் கடந்த மாதம் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசினார். பின்னர் ஆபாச எஸ்எம்எஸ், புகைப்படம் மற்றும் வீடியோ அனுப்பி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அப்பெண்ணின் தொடர்பு எண்ணை தனது முகநூலில் பாலியல் தேவைகளுக்காக தொடர்புகொள்ளவும் எனக் கூறி பகிர்ந்துள்ளார். இதனால் அவரது போனில் பல அழைப்புகள் வந்து அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். அதனை தொடர்ந்து தியாகராயநகர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவிலும் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திலும் இது தொடர்பாக அப் பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் எஸ்எம்எஸ் வந்த தொடர்பு எண் மற்றும் முகநூல் கணக்கை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் அந்த மர்ம நபர், பாதிக்கப்பட்ட பெண் வாழும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (35) என்பது தெரியவந்தது. ராஜேஷை நேற்று மாலை கைது செய்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….