செம்பனார்கோயில், ஜூலை 23: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் இருந்து அரும்பாக்கம் வழியாக நல்லாடை செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக சங்கரன்பந்தல், தரங்கம்பாடி, பொறையார், நல்லாடை வழியாக காரைக்கால், அரும்பாக்கத்தில் இருந்து பெரம்பூர் வழியாக மயிலாடுதுறை உள்பட ஏராளமான ஊர்களுக்கு செல்ல முடியும். இதனால் மேற்கண்ட சாலையில் தினமும் லட்சக்கணக்கில் டூவீலர்கள், கார், வேன், பஸ், கனரக வாகனங்கள், டூரிஸ்ட் வேன்கள் சென்று வருகின்றன. மேற்கண்ட சாலையின் வழியாக பள்ளி கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் மேமாத்தூர் என்ற இடத்தில் மஞ்சளாற்றின் குறுக்கே சிமென்ட் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டில் செடி,கொடிகள், மரங்கள் முளைத்து காணப்படுகிறது. நாளடைவில் மரங்கள் பெரிதாக வளர்ந்து பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பாலம் வலுவிழந்து சேதமடைய வாய்ப்புள்ளதாகவும், அவ்வாறு பாலம் சேதமடைந்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்படும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே பாலத்தின் பக்கவாட்டில் முளைத்துள்ள செடி,கொடிகள், மரங்கள் அகற்றப்படுமா? என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.