Tuesday, July 9, 2024
Home » சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 95.25 கோடியில் உலக தரத்தில் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 95.25 கோடியில் உலக தரத்தில் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரம்

by kannappan

* ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் நவீன வசதிகள்  * ஐரோப்பிய ஒன்றிய குழு சென்னை வருகைசென்னை: கல்வியை கொடுக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் அனைத்து வகையிலும் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதிலும் மாநகராட்சி பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக திகழ வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் படிப்பு வாசனையே மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் முதல் தலைமுறையாக படிப்பதற்காக வருகின்ற ஒரே இடமாக மாநகராட்சி பள்ளிகளாக உள்ளன.  எனவே இங்கு படிக்கும் மாணவர்களுக்கு அதிகப்படியான கூடுதல் கவனம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது. அந்த வகையில், தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தரத்தை உலக தரத்தில் உயர்த்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதாவது, வெளிநாடுகளில் இருப்பதை போன்ற வகுப்பறைகள், கல்வி முறைகள் உள்ளிட்டவற்றை சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் அமைக்கும் வகையில் நவீன வசதிகளுடன் மேம்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகள் முடிவடைந்தால் தனியார் பள்ளிகளில் கூட இல்லாத வசதிகள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருக்கும் என்பது இந்த திட்டத்தின் நோக்கம். இதனால் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும்,  அவர்களின் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 119 தொடக்கப் பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலைப் பள்ளிகள் என்று மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு, அரசு பள்ளி ஆசிரியர்கள் அந்ததந்த பகுதிகளில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அரசு பள்ளியில் செயல்படுத்தப்படும் கல்வி முறை, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த முயற்சியால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தது.  தற்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1.50 லட்சம் மாணவர்கள் படிக்கும் கட்டமைப்புகள் உள்ளன. இதில், 88 ஆயிரம் முதல், 95 ஆயிரம் வரை என்ற சராசரி நிலையில் தான் மாணவர் சேர்க்கை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இந்த மாணவர் சேர்க்கை 1.15 லட்சமாக உயர்ந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு ஒரு லட்சத்தை தாண்டியது. இந்தாண்டு இதை மேலும் அதிகரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் உலக தரத்தில் நவீன முறையில் உட்கட்டமைப்பு வசதிகளை அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக முதற்கட்டமாக, ‘சிட்டிஸ்’ மற்றும் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தில் 50 பள்ளிகளை ‘மார்டன்’ பள்ளியாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று, மாநகராட்சி பள்ளிகள் அனைத்தையும் தரம் உயர்த்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்சாகம் அடைந்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, உலகத் தரத்தில் வகுப்பறைகளை உருவாக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டு நிதியுதவியுடன் ‘சிட்டிஸ்’ திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தியுள்ளது.    இத்திட்டத்தில், ₹95.25 கோடி மதிப்பில் 28 பள்ளிகள் ‘மார்டன்’ எனப்படும் நவீன வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில் கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:  பிரான்ஸ் மேம்பாட்டு முகமை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்படுத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைத்திருத்தலுக்கான நகர முதலீடுகள் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சியுடன் சென்னை சீர்மிகு நகர திட்டம் இணைந்து ₹95.25 கோடி மதிப்பில் சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்கான நகரங்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் இந்தியா  முழுவதும் 65 நகரங்கள் கலந்து கொண்டு தங்களது திட்ட அறிக்கையினை சமர்ப்பித்தன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 நகரங்களில் சென்னையும் ஒன்று. குறிப்பாக கல்வி தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்ட அறிக்கை சமர்ப்பித்த 2 நகரங்களில் சென்னை ஒன்றாகும். இத்திட்டத்தில்  சென்னை பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரான்ஸ் மேம்பாட்டு முகமையின் சார்பில் ₹76.20 கோடி கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகளுக்காக சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ₹19.05 கோடியும் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு நவீன வசதிகளுடன் கல்வி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.முதற்கட்டமாக 28 பள்ளிகள் ‘மார்டன்’ எனப்படும் நவீன  வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதில், டிஜிட்டல் முறையில்  கல்வி, நவீன ஆய்வகம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, விளையாட்டு வசதி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.6 முக்கிய காரணிகள்இந்த திட்டத்தின் மூலம் சென்னை மாநகராட்சி  பள்ளிகளில் கட்டிட உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், டிஜிட்டல்  கட்டமைப்புகள் மற்றும் மின்னாளுமை உருவாக்குதல், நவீன முறைகளில் கல்வி  கற்பித்தல், ஆசிரியர்களுக்கான கற்பிக்கும் திறனை மேம்படுத்துல்,  மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்துதல், தனியார் மற்றும்  தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் போன்ற 6 முக்கிய காரணிகளை  கொண்டு முழுவதுமாக நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளன.ஸ்டெம் ஆய்வகங்கள்இந்த திட்டத்தில் சென்னை  மாநகராட்சியின் 28 பள்ளிகள் முழுமையாக நவீன வசதிகளுடன் மாற்றம் செய்யப்பட   உள்ளன. அதன்படி, இந்தப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன வசதிகளுடன்  கூடிய ஆய்வகங்கள், சிறந்த விளையாட்டு  கட்டமைப்புகள், கழிவறைகள்,  ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள், சிறப்பு விளையாட்டு  பயிற்சிகள், ஸ்டெம் ஆய்வகங்கள் மற்றும் மொழி சார்ந்த ஆய்வகங்கள் அமைக்கும்  பணிகள் நடைபெற்று வருகின்றன.ஐரோப்பிய ஒன்றிய தூதர் மேயருடன் ஆலோசனைஇத்திட்டம் தொடர்பாக, இந்தியா மற்றும்  பூடான் நாட்டிற்கான ஐரோப்பிய ஒன்றிய தூதர் யூகோ அஸ்டுடோ தலைமையிலான  குழுவினர் மேயர் பிரியாவை நேற்று சந்தித்தனர். அப்போது, இத்திட்டத்தின்  கீழ் சென்னைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள்  குறித்தும், இத்திட்டத்தை சென்னைப் பள்ளிகளில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு  செல்வது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.சென்னைப் பள்ளிகளில்  மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் கேட்டறிந்தனர். மேலும் சென்னையின் வளர்ச்சிக்காக பல்வேறு நிலைகளில் உதவி  புரிய தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …

You may also like

Leave a Comment

sixteen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi