சென்னை: சென்னை துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரிகள் 4-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்தும், தற்போது வாடகை உயர்த்தி தரக்கோரி கண்டெய்னர் டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பு என்ற பெயரில் அனைத்து அமைப்புகளும் கடந்த 4-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகங்களில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டது. 80% வாடகை உயர்வு வழங்கக்கோரி துறைமுக கண்டெய்னர் லாரி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பு வேலைநிறுத்தம் செய்கிறது. சென்னை துறைமுக அதிகாரிகள் தமிழக அரசின் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் பெட்டக முனைய உரிமையாளர்கள் கண்டெய்னர் துறைமுக ஒப்பந்த கூட்டமைப்பினர் என பல்வேறு அமைப்புகளுடன் சென்னை துறைமுகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து கண்டெய்னர் டிரைலர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இயங்கும் கண்டெய்னர் லாரிகள் நிண்டவரிசையில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. …