புழல்: சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் மின் விளக்குகள் வீணாக எரிகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாதவரம், ரெட்டேரி, புழல், காவாங்கரை, தண்டல்கழனி, செங்குன்றம், சாமியார் மடம், திருவள்ளூர் கூட்டு சாலை, பாடியநல்லூர், எம்.ஏ.நகர், நல்லூர் சுங்கச்சாவடி வரை சாலையின் மைய பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சரிவர பராமரிப்பு இல்லாமல் பல இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருந்தது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த மின் விளக்குகளை சரி செய்து எரிய வைத்தனர். இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் பயனடைந்தனர். ஆனால், இந்த மின் விளக்குகள் பகல் நேரங்களில் அணைக்கப்படுவது இல்லை. இதனால், 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் தேவையில்லாமல் வீணாகிறது.எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் சுங்க சாவடியை குத்தகை எடுத்து உள்ள தனியார் நிறுவனத்தினர் பகல் நேரங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….