சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, சென்னை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஜூலை 3வது வாரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட்டை தமிழ்நாடு அரசு நடத்தும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். போட்டியை நடத்த உடனடியாக 100 கோடி ரூபாயை ஒதுக்கியதுடன், விழா ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க முதல்வர் உத்தரவிட்டார். இடையில் இருந்த இந்த 3 மாதங்களில் தமிழக அரசு போட்டிக்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, இன்று முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வருகிறார். இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம், பிரதமர் செல்லவுள்ள பெரியமேடு சாலைகள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளான இன்று(28.07.2022) ஒரு நாள் மட்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் அலங்கரிக்கப்பட்டுள்ள பல்வேறு இடங்களில், இரவு நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். …