சென்னையில் விதிகளை மீறி கட்டப்பட்ட 99 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்: 11 கட்டிடங்களுக்கு சீல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 5,000 சதுர அடி வரையிலான கட்டிட அனுமதியானது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளர்கள் மூலமாகவும், 5001 சதுர அடி முதல் 10,000 சதுர அடி வரை ரிப்பன் மாளிகையில் உள்ள நகரமைப்பு பிரிவின் மூலமாகவும் அளிக்கப்படுகிறது. அவ்வாறு கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டிட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டிடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கண்டறியப்பட்டால், கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டிடத்தை மூடி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும். அதனடிப்படையில் ராயபுரம் மண்டலத்தில் கடந்த 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் 125 நபர்களுக்கு இடத்தை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 99 கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்று விதிமீறல் கட்டிடங்கள் கண்காணித்து  நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை