சென்னை: மழைநீர் தேங்காமல் இருக்க, போர்கால அடிப்படையில் நடைபெற்றுவரும் மழைநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், சென்னை பெருநகரத்தின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க, போர்கால அடிப்படையில் நடைபெற்றுவரும் மழைநீர் கால்வாய் பணிகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் இன்று (11.10.2022) காலை முதல் கள ஆய்வு பணியினை மேற்கொண்டார்கள். சென்னை உள்வட்டச்சாலை, ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் அருகே, உதயம் தியேட்டர் அருகே, வளசரவாக்கம் கைகான்குப்பம், நந்தம்பாக்கம் கால்வாய், ஜெருசேலம் கல்லூரி எதிரே, நாராயணபுரம், பள்ளிகரனை, செம்மஞ்சேரி ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து உடனுக்குடன் மழைநீர் வடியும் வகையிலும், சாலைகளில் மழைநீர் தேங்கும் நிலை ஏற்பாடத வகையிலும், மழைநீர் வடிகால் அமைக்கவும் உத்தரவிட்டார்கள். கால்வாய் பணிகளை விரைவாக முடிப்பதற்கு அதிகாரிகளுடன் விவாதித்து, கட்டுமான பணிகளை சிறப்பாகவும், விரைவாகவும் முடித்திட அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்கள். இந்த ஆய்வின்போது, திரு.இரா.சந்திரசேகர், தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை, கோட்டப் பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்….