சென்னை: சென்னையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 28.80 லட்சம், 173 கிராம் தங்க நகைகளும், போலீசார் நடத்திய வாகன சோதனையில் 2.19 கோடி என மொத்தம் 2.48 கோடி மற்றும் 173 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் சென்னை காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து சென்னையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொண்டு, தேர்தல் விதிமுறை மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று ஆதம்பாக்கம், எம்.ஆர்.டி.எஸ். சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது வங்கி வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 28 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேபோல், யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் மின்ட் சாலையில் நடத்தப்பட்ட வாகன சோதனையில், பைக்கில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 173 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு துறைமுகம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மயிலாப்பூர் போலீசார் லஸ் அவென்யூ, 3வது தெருவில் சோதனையில் ஈடுபட்டபோது காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ₹80,000 கைப்பற்றப்பட்டு, காரை ஓட்டி வந்த ராம் மோகன்ராவ் மற்றும் பணத்தை தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் உரிய நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. ஐஸ் அவுஸ் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 1.62 கோடி கைப்பற்றப்பட்டு, காரில் வந்த சுகந்த்ராஜ் மற்றும் ஓட்டுநர் ஆகியோருடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் உரிய நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டனர். மீனம்பாக்கம் போலீசார் சுரங்கப்பாதை மற்றும் முக்குட்டு விநாயகர் கோயில் சந்திப்பில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ₹56.75 லட்சம் கைப்பற்றப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற வாகன சோதனையில், தேர்தல் பறக்கும்படை மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து மேற்கொண்ட வாகன சோதனையில், மொத்தம் பணம் 2.48 கோடி மற்றும் 173 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது…