சென்னை: மழைக்கால நோய்கள் என்பதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை மக்கள் பல்வேறு உடல் உபாதைகளுடன் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அதிகளவில் சிகிச்சைக்காக வந்து செல்வது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. அதன்படி பலர் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதன்படி, கீழ்ப்பாக்கம், தண்டையார்பேட்டை, ஸ்டான்லி, ராஜிவ் காந்தி, ஓமந்தூரார் உள்பட அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என சென்னையில் தினசரி 100க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது: வயிற்றுப்போக்கு, உடல் உபாதை போன்றவை மழைக்கால நோய்களாகும். சில சமயங்களில் மழைநீரோ அல்லது கழிவுநீரோ, குடிநீருடன் கலந்து விடும்போது கிருமிகள் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. எனவே தண்ணீரை எப்போதும் காய்ச்சி குடிக்க வேண்டும். அதேபோல் சமைக்கும் போது காய்கறிகளை நன்கு தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீர் சத்து அதிகளவில் குறைந்துவிடுகிறது. எனவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உயிர்காக்கும் மருந்தான உப்பு கரைசல் நீரை பொதுமக்கள் குடிக்க வேண்டும். இதன் மூலம் உடலில் ஏற்படும் நீர் இழப்பு தடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், வெள்ளநீர் பாதித்த பகுதிகளில் தினசரி 1,062 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் நேற்று முன்தினம் மட்டும் 23 ஆயிரத்து 760 பேர் சிகிச்சை பெற்றனர். தோல் வியாதி, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுக்கு கவனம் செலுத்தப்படுகிறது. பாதிப்பு கண்டறியப்படும் நபர்களின் வீடுகளில், தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரை வழங்கப்படுகிறது. மேலும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும், முகாம்கள் அமைக்கப்பட்டு பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை காலரா போன்ற பாதிப்புகள் கண்டறியப்படவில்லை என்றனர்….