சென்னை: சென்னைக்கு வரும் போதெல்லாம் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை தாங்கள் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, பாஜக ஒரு தேசியக் கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி. மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு. சென்னை வந்தபோது அமித்ஷா சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறுவது தவறான தகவல். அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமரோ, அமித்ஷாவோ வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் சந்திக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், தினகரன் 1 சதவீதம் கூட இடம்பெற வாய்ப்பு இல்லை என்றார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி தினகரன் அறிவித்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பதில் அளித்தார்….