ஈரோடு, ஏப். 18: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பசுவபட்டி பிரிவில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திற்குள் நேற்று காலை புள்ளிமான் ஒன்று தனது குட்டியுடன் தண்ணீர் தேடி புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி நாய்கள் குரைத்தபடி விரட்டியது. இதனால் பயந்து போன தாய் மான் தனது குட்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது. பின்னர், நாய்கள் மான் குட்டியை கடிக்க அருகே வந்தது. இதைப்பார்த்த தோட்டத்து உரிமையாளர் தேவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் நாய்களை விரட்டி குட்டி மானை மீட்டு, சென்னிமலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குட்டி மானை கைப்பற்றி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மீட்கப்பட்ட மான், ஒரு மாத குட்டி என வனத்துறையினர் தெரிவித்தனர்.