நீடாமங்கலம், ஜூலை 24: கொரடாச்சேரி அருகே செட்டிசிமிழி கிராமத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து கூரை வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. கொரடாச்சேரி அருகே செட்டிசிமிழி கிராமத்தில் செந்தில் என்பவரது கான்கிரீட் வீட்டின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கீற்று கூரை வீட்டில் மார்க்ஸ் என்பவர் தனது மனைவி சரிதா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென காஸ் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் மேல் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
தகவலறிந்த குடவாசல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து தடுத்தனர். வீட்டில் இருந்த துணி, நகை, பணம், மின்சார சாதன பொருட்கள், பத்திரங்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அனைத்தும் முற்றிலும் எறிந்து சாம்பலானது.
தகவலறிந்த நீடாமங்கலம் தாசில்தார் தேவேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா, மண்டல துணை தாசில்தார் அறிவழகன், விஏஓ ராஜ்குமார், பாலாஜி உட்பட கிராம முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.