செஞ்சி அருகே பரபரப்பு பள்ளி மாணவியை கடத்த முயற்சி

செஞ்சி, பிப். 14: செஞ்சி அருகே பள்ளி மாணவியை மர்மநபர்கள் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கீழ்பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் சாரங்கபாணி மகள் ஆதிலட்சுமி (11). இவர் தையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு சைக்கிளில் தையூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சைக்கிளின் செயின் கழண்டு கொண்டதால் ஆதிலட்சுமி இறங்கி அதனை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மாணவியை கையைப் பிடித்து இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்ற முயன்றனர். அப்போது ஆதிலட்சுமி கையில் வைத்திருந்த சிலம்பம் சுற்றும் கம்பால் மர்ம நபர்களை தாக்க முயற்சி செய்தார். இதனை அறிந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் கவினா மற்றும் போலீசார் விசாரணை செய்தனர். மேலும் பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்