செங்கல்பட்டு, ஜூன் 14: செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி கூட்டம் (வருவாய் தீர்வாயம்) நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும், என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, செங்கல்பட்டு குறு வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வேண்டி கலெக்டர் அருண்ராஜிடம் நேரடியாக மனு அளித்தனர். அந்த மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதையடுத்து, மனு அளித்த 10 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை உடனே வழங்கி மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதேபோல், நலிந்தோர் உதவித்தொகை வேண்டி விண்ணப்பித்த 5 நபர்களுக்கு நலிந்தோர் உதவித்தொகையாக தலா ₹20 ஆயிரத்திற்கான வரைவோலைகளை வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், ஜமீன் பல்லாவரம் கிராமத்தைச் சேர்ந்த திருபுரம்மாள் என்பருக்கு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007ன்படி, அவரது கணவரின் பெயரில் உள்ள பட்டாவினை தனது பெயரில் மாற்ற வேண்டி மனு அளித்தார். அந்த மனுவின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு கணவரின் பெயரில் இருந்த வீட்டுமனை பட்டாவை அவரது மனைவி திருபுரம்மாள் என்பவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ததற்கான ஆணையை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். மேலும், திருபுரம்மாளுக்கு மகன் கன்னியப்பன் என்பவர் மாதாந்திர பராமரிப்பு தொகையாக ₹5 ஆயிரம் பிரதி மாதம் 5ம் தேதிக்குள் செலுத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.