செங்கல்பட்டில் தனியார் கம்பெனி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தனியார் கம்பெனி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (27). இவர் செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் வாடகை வீட்டில் தங்கி செங்கல்பட்டு அடுத்த மஹேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் புரொடக்‌ஷன் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமுவுடன் வேலை பார்க்கும் ராகவன் என்பவர் ராமுவின் வீட்டிற்கு வந்தார். கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் கதவை தட்டி ராமுவை அழைத்தார்.

ஆனால், ராமு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோதும் ராமு செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராகவன் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ராமு மின்விசிறியில் நைலான் கயிற்றைக் கட்டி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதையடுத்து, போலீசார் ராமுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு