செங்கம் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனை அடையாளம் தெரியாத பெண் கடத்தி சென்றார். உடனே அந்த குழந்தையின் தாய் பெண்ணை விரட்டிச் சென்று கண்களில் மிளகாய் பொடி தூவி குழந்தையை மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம் கொட்டாவூர் ஊராட்சி கொ.அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மோகன்(30). இவரது மனைவி சென்னம்மாள்(30). இவர்களது மகன் தீபக்(2). இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தை தீபக் வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வனப்பகுதி வழியாக வந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் டீரென குழந்தையை தூக்கி சென்றுள்ளார். இதையறிந்த சென்னம்மாள் அந்த பெண்ணை துரத்தி சென்றார். பின்னர் அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவி குழந்தையை மீட்டுள்ளார். இதற்கிடையே அடையாளம் தெரியாத பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையறிந்த ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி கண்ணன் செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், குழந்தை கடத்திய அடையாளம் தெரியாத பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கிராமப் பகுதியில் காட்டு தீ போல பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.