சூளகிரியில் பெற்றோர் பிரித்து விடுவார்கள் என பயந்து காதல் ஜோடி விஷம் குடிப்பு காதலி சாவு; காதலன் சீரியஸ்

சூளகிரி: சூளகிரி அருகே பெற்றோர் பிரித்து விடுவார்கள் என பயந்து போன காதல் ஜோடி விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காதலி உயிரிழந்தார். காதலனுக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் போலார் மாவட்டம் வேம்கல் என்ற பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மகள் அனுஸ்ரீ (14), அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரும், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள எர்ரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜ் (22) என்பவரும் உறவுக்காரர்கள். மாமா முறையான சவுந்தர்ராஜூம் அனுஸ்ரீயும் காதலித்தனர். இதனையறிந்த இருதரப்பு பெற்றோரும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே 3 முறை வீட்டை விட்டு இந்த காதல் ஜோடி வெளியேறியது. அப்போது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் மீண்டும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அறிவுரை வழங்கி, 18 வயது எட்டிய பிறகு திருமணம் செய்து வைப்பதாக கூறி வந்துள்ளனர்.இதனிடையே 4வது முறையாகவும் சவுந்தர்ராஜூம் அனுஸ்ரீயும் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து ஆனந்தன், வேம்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளை சவுந்தர்ராஜ் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர். இதனை அறிந்த சவுந்தர்ராஜூம் அனுஸ்ரீயும், தங்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என பயந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்தை வாங்கி குடித்து விட்டு சூளகிரி அருகே மயங்கி கிடந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அனுஸ்ரீ உயிரிழந்தார். தொடர்ந்து சவுந்தர்ராஜூக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

அக்டோபரில் யு-வின் தளத்தை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பள்ளியில் மாணவனுக்கு பிளேடு வெட்டு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்