விவசாயிகள் விளைபொருட்களில் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பினை குறைத்து, சூரிய சக்தியைப் பயன்படுத்தி சுகாதாரமான முறையில் மாசுபடாமல், விரைவாக உலர வைத்து தரத்தினை உறுதி செய்து, விளைபொருட்களின் இருப்பு காலத்தை அதிகரித்து, மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டிட ஏதுவாக, பாலிகார்பனேட் தகடுகள் வேய்ந்த பசுமை குடில் வகையிலான சூரிய கூடார உலர்த்திகள் விவசாயிகளுக்கு மானியத்துடன் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைத்துத் தரப்படுகிறது.சூரிய கூடார உலர்த்தியில் வேளாண் விளை பொருட்களை உலர வைப்பதன் மூலம் விளை பொருட்களை உலர்த்துவதற்கான கால அளவு, கூலியாட்கள் செலவு, அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு ஆகியவை குறைகிறது. சூரிய கூடார உலர்த்தியில் கொப்பரை தேங்காய் பூஞ்சை தொற்றின்றி உலர்வதால், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்த அவசியமில்லை.விவசாயிகளின் தேவைக்கேற்பவும், இடவசதிக்கேற்பவும் சூரிய கூடார உலர்த்திகள் 400 முதல் 1000 சதுர அடி பரப்பளவு வரை அமைத்துத் தரப்படுகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து விவசாயிகள் தங்களுக்கான நிறுவனத்தினை தேர்வு செய்து கொள்ளலாம். மானிய விவரம்சூரிய கூடார உலர்த்திகள் நிறுவும் செலவின் முழுத் தொகையை முன்பணமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் செலுத்தி 40 சதவீதம் பின்னேற்பு மானியமாக பெற விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்களுக்கு கீழ்க்கண்ட மானியத்துடன் அமைத்துத் தரப்படுகிறது. சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.3.50 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக சம்பந்தப்பட்ட விவசாயியின் வங்கிக் கணக்கில் வழங்கப்படுகிறது.இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில், 40 சதவீதம் அல்லது ரூ.3.00 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயன்பெற விரும்பும் விவசாயிகள், விவசாயக் குழுக்கள் அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகத்தினை அணுகி பயன் பெறலாம்….