செய்யூர், டிச.30: சூனாம்பேட்டில் உள்ள அரசு மாணவர் விடுதி வளாகத்தில் பல நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்கள் பரவும் என்ற அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு ஊராட்சி இல்லீடு பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் அருகே ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் அரசு மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சூனாம்பேடு ஊராட்சி அரசு பள்ளிகளில் பயிலும் 50க்கும் மேற்படட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
விடுதியை சுற்றி 4 புறமும் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இவ்விடுதியானது தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், ஆண்டுதோறும் சிறு மழை பெய்தாலும், வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்படும். இம்மழைநீர் வெளியேற வழியின்றி, விடுதி வளாகத்தில் தேங்கி நிற்பதால், இதில் கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களுக்கு பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும், விடுதிக்கு பின்னால் ஏரி அமைந்துள்ளதால் மழைக்காலங்களில் ஏரிநீர் விடுதியை சுற்றி சூழ்ந்து காணப்படுவதால், விஷ ஜந்துக்கள் அவ்வப்போது விடுதிக்குள் உலா வருகிறது. இதனால், மாணவர்கள் அச்சத்துடனே விடுதியில் தங்கியுள்ளனர்.
எனவே, தாழ்வான பகுதியில் உள்ள விடுதி வளாகத்தில் மண் நிரப்பி, நிலத்தின் உயரத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி இந்த விடுதி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.