ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்கா முழுவதிலும் பூத்துள்ள சிவப்பு நிற சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மலர் கண்காட்சிக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், தற்போது பூங்கா பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பூங்கா முழுவதிலும் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் சிவப்பு நிற சால்வியா மலர்கள் பூத்துள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த மலர் செடிகளை கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். தற்போது ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வரும் நிலையில், மலர் செடிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், ஓரிரு நாட்களில் பெரும்பாலான மலர் செடிகளில் மலர்கள் பூத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது….